நரைத்துப் போன வெள்ளை முடிக்கு கலர் சாயம் பூசுவதை மார்க்கம் ஆர்வமூட்டுகிறது. அதே வேளை கறுப்புச் சாயம் பூசக்கூடாது என்று வலியுறுத்துகிறது.
நரை முடிக்கு (பியூர் ப்ளாக்) கறுப்புச் சாயம் பூசுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சாதாரணமான அல்லது இருண்ட (Dark) மற்றும் பிரகாசமான (Bright) எந்த நிறமும் பூசிக் கொள்ளலாம் என்றும் பின்வரும் நபிமொழிகளிலிருந்து விளங்கலாம்.
مسند أحمد بن حنبل (3/ 160)12656 - حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن سلمة الحراني عن هشام عن محمد بن سيرين قال سئل أنس بن مالك عن خضاب رسول الله صلى الله عليه و سلم فقال : ان رسول الله صلى الله عليه و سلم لم يكن شاب الا يسيرا ولكن أبا بكر وعمر بعده خضبا بالحناء والكتم قال وجاء أبو بكر بأبيه أبي قحافة إلى رسول الله صلى الله عليه و سلم يوم فتح مكة يحمله حتى وضعه بين يدي رسول الله صلى الله عليه و سلم فقال رسول الله صلى الله عليه و سلم لأبي بكر لو أقررت الشيخ في بيته لأتيناه مكرمة لأبي بكر فاسلم ولحيته ورأسه كالثغامة بياضا فقال رسول الله صلى الله عليه و سلم غيروهما وجنبوه السواد
مستخرج ابي عوانة (9/ 294)7036 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمُ أَبُو عَلِيٍّ الْقُهِسْتَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنِ أبى الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ إِلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم -، عَامَ الْفَتْحُ، وَكَانَ رَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -:ابْعَثُوا بِهِ إِلَى عند نِسَائِهِ، فَلَيُغَيِّرْنَهُ، وَلِيُجَنِّبْنَهُ السَّوَادَ،
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத்12656, முஸ்தக்ரஜ் அபீஅவானா 7036
4988 أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَلَبِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
புறாவின் கழுத்தில் உள்ள (தூய கறுப்பு நிறத்)தைப் போன்ற கறுப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ 5075
இவ்வாறு, கறுப்பு நிறத்தை தவிர மற்ற நிறங்களைப் பூசுவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது.
ஆனால், ஓரிரு வருடங்களுக்கு முன்னால் ஒரு அரபு இணையதளத்தில் “கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்ற ஸஹீஹ் முஸ்லிமில் 4270 வது செய்தியாக இடம்பெற்றிருக்கும் அறிவிப்பை குறை காணும் விதமாக ஒரு சிறிய ஆக்கம் வெளியிடப்பட்டிருந்தது.
மேற்படி ஹதீஸை குறை கண்டு கறுப்புச் சாயம் பூசலாம் என்று அனுமதிப்பதற்கு அதில் எழுதப்பட்ட வாதம் ஏற்கத்தக்க வகையில் அமைந்ததாக இல்லை என்பதால் அது பற்றி எந்தச் சர்ச்சையும் இல்லை.
அந்த இணையதளத்தில் எழுதப்பட்ட அதே வாதமும் அத்துடன் சில அர்த்தமற்ற விஷயங்களும் தற்போது மக்களிடத்தில் பேசுபொருளாக சிலர் ஆக்கியுள்ளனர்.
இது தொடர்பாக பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
அபூபக்ர்(ரலி)யின் தந்தை வழியாக வரும் செய்தி
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4270
இந்தச் செய்தி ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னது அஹ்மத் மற்றும் முஸ்தக்ரஜ் அபீ அவானா போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மேலே கண்டோம்.
இந்தச் செய்தியில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை அபூகுஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் அழைத்து வரப்படுகிறார். அந்நேரம் முதுமையின் காரணத்தால் அவரிடம் காணப்பட்ட நரை முடிகளை நபியவர்கள் கண்ட போது இவற்றிற்கு சாயம் பூசுங்கள் என்று ஏவுவதுடன், கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
கறுப்புச் சாயம் பூசக் கூடாது என்பதற்கு நேரடித் தடையாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் அறிவிப்பில் உள்ள “கறுப்பைத் தவித்துக் கொள்ளுங்கள்” எனும் வாசகம் மட்டும் நபியவர்கள் கூறியது இல்லை. அது “ஷாத்” வகையில் அமைந்தது என்கின்றனர்.
அதாவது, அபூகுஹாஃபாவின் நரைமுடிக்குச் சாயம் பூசச் சொன்னார்கள் என்பது மட்டும் தான் ஹதீஸில் உள்ளது. கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற வாசகம் ஹதீஸின் வாசகமல்ல என்கின்றனர்.
இந்த வாதம் ஹதீஸ் துறையில் ஏற்கத்தக்க வாதமல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஷாத் என்று இவர்கள் சொல்லும் வாதம் சரியா என்று அறிவதற்கு முன்னால் மேற்படி ஹதீஸின் தரத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் செய்தியை ஜாபிர்(ரலி)யிடமிருந்து அபூசுபைர் என்பவர் அறிவிக்கின்றார்.
அபூசுபைரிடமிருந்து இப்னு ஜுரைஜ் என்பவர் அறிவிக்கின்றார்.
இந்த இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் செய்பவர் (இருட்டடிப்பு செய்பவர்) என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
எந்த அறிவிப்பாளர் மீது தத்தலீஸ் செய்பவர் என்று விமர்சனம் உள்ளதோ அவர், தாம் யாரிடமிருந்து செய்தியை அறிவிக்கிறாரோ அவரிடமிருந்து தாம் நேரடியாக கேட்டதைத் தமது அறிவிப்பில் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
அவ்வாறு தெளிவுபடுத்தாமல்) عن அன்(, قال )கால( என்பதைப் போல மூடலான வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தால் அந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்படாது.
குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இப்னு ஜுரைஜ் என்பவர் அபூசுபைரிடமிருந்து அறிவிக்கும் போது அன் என்ற வார்த்தையையே அறிவிக்கின்றார்.
எனவே, குறிப்பிட்ட இந்த அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஏற்றுக் கொள்ளும் விதமாக இல்லை.
ஆனால், கறுப்புச் சாயம் பூசக்கூடாது என்பதற்கு இந்தச் செய்தி மட்டும் ஆதாரமில்லை. வேறு அறிவிப்புகளும் உள்ளன. அதுபற்றி பின்னால் விளக்குவோம்.
ஷாத் என்ற விமர்சனம் சரியா?
எந்தவொரு விமர்சனமாக இருந்தாலும் அது சரியான விதியின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அது ஏற்றுக்கொள்ளத்தக்க விமர்சனமாக ஆகும்.
அரபு இணையதளத்தில் வெளியிட்டு விட்டாலே அது சரியானதாக ஆகிவிடாது.
முதலில், ஒரு செய்தியை “ஷாத்“ என்று கூறுவதாக இருந்தால் ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள ஷாத் என்ற வரையறையின் கீழ் அச்செய்தி பொருந்த வேண்டும்.
ஷாத் என்றால் என்ன?
ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் பல மாணவர்கள் “முரண்பட்ட” இரு விதத்தில் அறிவித்தார்கள் எனில் அதில் அதிகமானோரின் அறிவிப்பை ஏற்று, குறைவானவர்களின் அறிவிப்பை விட்டுவிட வேண்டும். அல்லது மிக நம்பகமானவர்களின் அறிவிப்பை ஏற்று நம்பகமானவர்களின் அறிவிப்பை விட்டு விட வேண்டும். ஏற்றுக் கொள்ளாமல் விடப்பட்ட அறிவிப்பிற்கே ஷாத் என்று சொல்லப்படும்.
இதை நன்கு கவனத்தில் கொள்ளவும்.
இப்போது, அபூகுஹாஃபா தொடர்பான செய்தியை அறிவிப்பவர்கள் பற்றி பார்ப்போம்.
இந்தச் செய்தி நபித்தோழர்களிலிருந்து ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஜாபிர்(ரலி)யிடமிருந்து அபூசுபைர் அறிவிக்கிறார்.
அபூசுபைரிடமிருந்து பல மாணவர்கள் இச்செய்தியை அறிவிக்கிறார்கள். அதில் பின்வரும் மாணவர்கள் வழியாக உள்ள அறிவுப்புகள் அறிவிப்பாளர் தொடர் ரீதியாக பலமானதாக இருக்கின்றன. பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.
1. அய்யூப்
2. சுஹைர்
3. அபூகைஸமா என்ற அஸ்ரா
இவர்களில் அய்யூப் என்பவர் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் வாசகத்தை ஜாபிர் (ரலி) கூறியதாக அபூசுபைரிடமிருந்து அறிவிக்கிறார்.
(இப்னு ஜுரைஜ் அறிவிக்கும் ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பு பலவீனமானது என்று மேலே பார்த்துவிட்டோம்.)
مستخرج ابي عوانة (9/ 294)7036 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمُ أَبُو عَلِيٍّ الْقُهِسْتَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنِ أبى الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ إِلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم -، عَامَ الْفَتْحُ، وَكَانَ رَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -:ابْعَثُوا بِهِ إِلَى عند نِسَائِهِ، فَلَيُغَيِّرْنَهُ، وَلِيُجَنِّبْنَهُ السَّوَادَ،
இந்த அறிவிப்பில் அய்யூப் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் வாசகத்தை ஜாபிர் (ரலி) கூறியதாக அபூசுபைரிடமிருந்து அறிவித்துள்ளார். (பார்க்க: முஸ்தக்ரஜ் அபீஅவானா 7036)
அடுத்து, இதே செய்தியை அதே அபூசுபைரிடமிருந்து அறிவிக்கும் மற்ற இரு மாணவர்களான அபூகைஸமா என்ற அஸ்ராவும் சுஹைர் என்பவரும் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகத்தை கூறவில்லை.
5630 - حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ أُتِىَ بِأَبِى قُحَافَةَ أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ أَوْ يَوْمَ الْفَتْحِ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ أَوِ الثَّغَامَةِ فَأَمَرَ أَوْ فَأُمِرَ بِهِ إِلَى نِسَائِهِ قَالَ « غَيِّرُوا هَذَا بِشَىْءٍ ».
இந்த அறிவிப்பில் சுஹைர் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் வாசகத்தை ஜாபிர் (ரலி) கூறியதாக அபூசுபைரிடமிருந்து அறிக்கவில்லை. (பார்க்க: முஸ்லிம் 4269)
السنن الكبرى للنسائي (8/ 326)9295 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ وَهُوَ ابْنُ ثَابِتٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي قُحَافَةَ، وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَأَنَّهُ ثَغَامَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا، وَاخْضِبُوا لِحْيَتَهُ»
இந்த அறிவிப்பில் அஸ்ரா, “கறுப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் வாசகத்தை ஜாபிர் (ரலி) கூறியதாக அபூசுபைரிடமிருந்து அறிவிக்கவில்லை. (பார்க்க: ஸூனனுல் குப்ரா 9295)
அபூசுபைரின் மாணவர்களில் மூவரில் இருவர், “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்ற வாக்கியத்தைட் சொல்லவில்லை என்பதே அவர்கள் இந்தப் பகுதியை ஷாத் என்று கூறுவதற்கு காரணமாகும்.
ஆனால் இது சரியான வாதமல்ல என்பதை மேற்படி ஷாதின் நிபந்தனையைப் படித்த அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
ஏனெனில், அதிகமானோருக்கு மாற்றமாக குறைவானோர் அல்லது மிக நம்பகமானோருக்கு மாற்றமாக நம்பகமானோர் “முரண்பட்டு” அறிவிக்கும் போது தான் ஷாத் என்ற விதி பொருந்தும்.
இங்கு அதிகமானோருக்கு மாற்றமாக குறைவானோர் அறிவிக்கும் நிலையில்லை. ஏனெனில், கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒருவரும், அதைக் கூறாமல் இருவரும் அறிவித்துள்ளனர். மூவரும் நம்பகமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு விதமான அறிவிப்புகளும் ஷாத் என்ற விதிக்கு அடிப்படைத் தகுதியான முரண்பாடு உள்ளதாகவும் இல்லை.
இருவர் ஏதேனும் நிறத்தைக் கொண்டு மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறும் போது கறுப்பை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் அறிவிப்பது கூடுதல் விளக்கம் தானே தவிர முரண்பாடு இல்லை.
இதை ஹதீஸ்கலையில் “ஸியாதத்துஸ் ஸக்கித்தி மக்பூலா” என்று குறிப்பிடுவார்கள்.
அதாவது, நம்பகமானவர் (முரண்படாமல்) அதிகப்படியாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே அந்த விதியாகும்.
இந்த அடிப்படையில் மேற்படி செய்தியில் ஷாத் என்று கூறி மறுப்பதற்கு எந்த முரண்பாடும் இல்லை. இது ஏற்றுக்கொள்ளத்தக்க கூடுதல் விளக்கமே என்பது தெளிவாகிறது.
அபூசுபைர் மறுத்தது ஆதாரமாகுமா?
கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல என்று கூறுவதற்கு மற்றொரு வாதத்தையும் அதில் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது, ஜாபிர்(ரலி)யிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபூசுபைர் அவர்களே “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் கூடுதலான வாசகத்தை, தான் சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார். சொன்னவரே மறுத்துவிட்டதால் அதை நபியின் கூற்றாக ஏற்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூசுபைர் மறுத்தது தொடர்பான செய்தி, முஸ்னது அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
مسند أحمد بن حنبل (3/ 338)14682 حدثنا عبد الله حدثني أبي ثنا حسن وأحمد بن عبد الملك قالا ثنا زهير عن أبي الزبير عن جابر قال أحمد في حديثه ثنا أبو الزبير عن جابر قال : أتى رسول الله صلى الله عليه و سلم بأبي قحافة أو جاء عام الفتح ورأسه ولحيته مثل الثغام أو مثل الثغامة قال حسن فأمر به إلى نسائه قال غيروا هذا الشيب قال حسن قال زهير قلت لأبي الزبير أقال جنبوه السواد قال لا
இச்செய்தியில், அபூபக்ர்(ரலி) அவர்களின் தகப்பனார் அபூகுஹாஃபாவுக்கு நபிகள் நாயகம் நரை முடிக்கு சாயம் பூசச் சொன்னார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் செய்தியை அபூசுபைர் அறிவிக்கின்றார். அப்போது, அவருடைய மேலே எடுத்துக்காட்டிய மாணவர்களில் சுஹைர் என்பவர் அபூசுபைரிடம் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று ஜாபிர் கூறினாரா? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு இல்லை என்று அபூசுபைர் பதிலளிக்கின்றார்.
இது அஹ்மத் 14682 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூசுபைர் இவ்வாறு மறுப்பதை வைத்துக் கொண்டு மட்டும் இந்தச் செய்தியை குறைகாண இயலாது.
ஏனெனில், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசுபைரின் ஆசிரியரான ஜாபிர் (ரலி) மட்டும் இச்செய்தியை அறிவிக்கவில்லை. அனஸ்(ரலி)யும் அறிவித்துள்ளார்கள்.
مسند أحمد بن حنبل (3/ 160)12656 - حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن سلمة الحراني عن هشام عن محمد بن سيرين قال سئل أنس بن مالك عن خضاب رسول الله صلى الله عليه و سلم فقال : ان رسول الله صلى الله عليه و سلم لم يكن شاب الا يسيرا ولكن أبا بكر وعمر بعده خضبا بالحناء والكتم قال وجاء أبو بكر بأبيه أبي قحافة إلى رسول الله صلى الله عليه و سلم يوم فتح مكة يحمله حتى وضعه بين يدي رسول الله صلى الله عليه و سلم فقال رسول الله صلى الله عليه و سلم لأبي بكر لو أقررت الشيخ في بيته لأتيناه مكرمة لأبي بكر فاسلم ولحيته ورأسه كالثغامة بياضا فقال رسول الله صلى الله عليه و سلم غيروهما وجنبوه السواد
இவ்வாறு நபி (ஸல்) அவர்களிடமிருந்து இன்னொரு நபித்தோழரும் “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவித்திருக்கும் போது இந்த வாசகம் ஹதீஸில் இல்லை என்று அபூசுபைர் மறுப்பது அவர், தாம் அறிவித்ததை மறந்திருக்கலாம் என்பதைத் தான் காட்டுகிறது.
மேலும், அபூசுபைரிடமிருந்து “கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகத்தை அறிவிக்கும் மாணவரும் நம்பகமானவர் தான்.
இவ்வாறு அபூசுபைரின் ஆசிரியர் ஜாபிர் (ரலி) அல்லாமல் கூடுதலாக அனஸ்(ரலி)யும் அபூசுபைரின் மாணவர்களில் நம்பகமான ஒருவரும் இதை அறிவித்திருக்கும் போது, இவர் தனது மாணவர்களுக்கு அறிவித்ததைப் பின்னாளில் மறந்துவிட்டார் என்பது தான் உறுதியாகிறது.
மேலும் இது போல, ஒரு அறிவிப்பாளர், தாம் அறிவித்த தகவலைத் தாமே உறுதியாகாத விதத்தில் மறுத்தால் அது அந்தச் செய்தியில் எந்தக் குறையையும் ஏற்படுத்தாது என்பது ஹதீஸ்துறையில் அறியப்பட்ட விஷயம்.
تدريب الراوي في شرح تقريب النواوي (1/ 395)فإن قال: لا أعرفه أو لا أذكره أو نحوه لم يقدح فيه.
ஒரு அறிவிப்பாளர் (தான் அறிவித்த தகவல் குறித்து அவரே) நான் இதை அறிய மாட்டேன் என்றோ நான் இதைக் கூறவில்லை என்றோ அல்லது இது போன்ற (உறுதியற்ற வார்த்தையில்) கூறினால் அது அந்த அறிவிப்பில் எந்தக் குறையையும் ஏற்படுத்தாது. (தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 395)
எனவே, மேற்படி காரணங்களால் அபூசுபைர், தாம் அறிவித்த வாசகத்தை மறுத்ததினால் மட்டும் அது ஹதீஸ் இல்லை என்று ஆகிவிடாது.
எனவே, கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற பகுதி நபிகளாரின் கூற்றுத் தான் என்பது தெளிவாகிறது.
இத்துடன் கறுப்புச் சாயம் தொடர்பான மற்றொரு செய்தி பற்றிய விமர்சனத்தையும் அதன் பதிலையும் காண்போம்.
சொர்க்கத்தின் வாடையை நுகர முடியாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
புறாவின் கழுத்தில் உள்ள (தூய கறுப்பு நிறத்)தைப் போன்ற கறுப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ 5075
இறுதிக் காலத்தில் தோன்றும் கூட்டம் கறுப்புச் சாயம் பூசுவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என்று இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
கறுப்புச் சாயம் பூசுவதற்கு எதிரான கடும் எச்சரிக்கையாக இச்செய்தி அமைந்துள்ளது.
இச்செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஸயீத் பின் சுபைர் என்பவர் அறிவிக்கின்றார்.
ஸயீதிடமிருந்து அறிவிக்கும் அப்துல் கரீம் என்பவர் பலவீனமானவர். ஆகவே இந்தச் செய்தி பலவீனமானது என்று வெகுசிலர் கூறுகின்றார்கள்.
இமாம் இப்னுல் ஜவ்சீ இதில் இடம் பெறும் அப்துல்கரீம் என்பவர் அபுல் மகாரிகின் மகன் அப்துல் கரீம். அவர் மிகவும் பலவீனமானவர் என்று இச்செய்தியை விமர்சித்துள்ளார்.
الموضوعات - ابن الجوزي (3/ 55)عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال: " يكون قوم في آخر الزمان يخضبون بهذا السواد كحواصل الحمام لا يريحونرائحة الجنة ".قال البغوي: حدثنا عبد الجبار بن عاصم حدثنا عبيدالله بإسناده نحوه عن ابن عباس ولم يرفعه.هذا حديث لا يصح عن رسول الله صلى الله عليه وسلم، والمتهم به عبد الكريم ابن أبى المخارق أبو أمية البصري.
இந்தச் செய்தி பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட அப்துல்கரீம் பின் அபில் மகாரிக் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இது சரியான செய்தி அல்ல. (பார்க்க: அல்மவ்ளூஆத் பாகம் 3 பக்கம் 55)
ஆனால், இந்த விமர்சனம் தவறானதாகும்.
ஏனெனில், மேற்படி ஹதீஸில் இடம்பெறும் அப்துல்கரீம் என்பவர் அபுல் மகாரிகின் மகன் அல்ல. அவர் பலவீனமானவர் தான்.
இந்தட் செய்தியில் இடம் பெறும் அப்துல்கரீம் என்பவர் மாலிக் அல்ஜஸரீ என்பவரின் மகனாவார். இந்த அப்துல்கரீம், நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளார்.
ஸயீத் பின் ஜுபைரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்கரீம் பின் மாலிக் அல்ஜஸரீ என்பவர் நம்பகமானவர் என்று அல்ஜரஹ் வத்தஃதீல் உள்ளிட்ட பல ஹதீஸ் துறை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 98)
இறுதிக்காலம் என்பது கருத்துப்பிழையா?
அடுத்து இந்தச் செய்தியின் கருத்தை வைத்து இந்தச் செய்தியை ஏற்க முடியாது என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில், இறுதிக் காலத்தில் கறுப்புச் சாயம் பூசுவார்கள் என்று மேற்படி செய்தியில் வருகிறது. ஆனால் நபித்தோழர்கள் காலத்திலேயே பலர் கறுப்புச் சாயம் பூசியுள்ளார்கள். நபியின் காலத்திலேயே கறுப்புச் சாயம் பூசும் வழக்கம் இருந்ததால் தான் கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. அவர்களின் காலம் எப்படி இறுதிக் காலமாகும்? என்று கேட்கப்படுகிறது.
பிற்காலத்தில் அல்லது இறுதிக் காலத்தில் நடக்கும் சில விஷயங்களை மற்றும் கூட்டத்தாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அந்த ஹதீஸில் சொல்லப்பட்ட தன்மை இறுதிக் காலத்தில் மட்டும் தான் புதிதாக ஏற்படும் என்ற கருத்தில் சொல்லப்பட்டதல்ல. அந்தத் தன்மை நபி (ஸல்) காலத்தில் இருந்தாலும் அதிகமாக பிற்காலத்தில் ஏற்படும் என்ற கருத்தில் தான் அந்தச் செய்திகளில் சொல்லப்பட்டிருக்கும்.
உதாரணமாக, முன்னறிவிப்பு தொடர்பான சில செய்திகளைப் பார்க்கலாம்.
இறுதிக் காலத்தில் கொலை அதிகரிக்கும் என்றார்கள் (புகாரி 6037). நபித்தோழர்கள் காலத்திலேயே யுத்தங்களும் கொலைகளும் அதிகளவில் நடக்கத்தான் செய்தன.
ஒரு காலம் வரும் அதில் பொருளாதாரத்தில் ஹலால் – ஹராம் பேணுதல் இருக்காது என்றார்கள். (புகாரி 5029). இதுவும் நபித்தோழர்கள் காலத்திலேயே இருக்கத்தான் செய்தது. திருட்டு, வட்டி உள்ளிட்ட ஹராமான பொருளீட்டல் அவர்களின் காலத்திலும் இருந்தது.
இப்படி இறுதிக் காலம் அல்லது மறுமை நாளுக்கு முன்பாக நடக்கும் என்று நபி (ஸல்) பட்டியலிட்ட பல நிகழ்வுகள் அப்போதும் நடக்கத்தான் செய்தன. இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்து, பின்னாளில் வரும் மக்களிடையே பருமன் - தொந்தி இருக்கும் என்றார்கள் (புகாரி 3650). அதனால் நபித்தோழர்கள், தாபியீன்கள் காலத்தில் எவருக்கும் தொந்தியே கிடையாது என்பது அதன் பொருளல்ல.
பிற்காலத்தில் தோன்றும் சில மக்களின் அடையாளத்தை, அவர்களின் தன்மையை இதன் மூலம் விளக்குகின்றார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதிக் காலத்தில் நடக்கும் என்று சொன்னது எப்படி நபித்தோழர்களின் காலத்தில் நடக்கலாம் என்று கேள்வி எழுப்பி கருத்துப்பிழை என்று சொல்வது சரி என்றால் அது போன்று பல செய்திகளையும் கருத்துப்பிழை என்று கூற வேண்டியது வரும்.
அதுபோலத்தான் பிற்காலத்தில் கறுப்புச் சாயம் பூசுவோர் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள் என்று அவர்களின் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்கள். பிற்காலத்தில் என்று சொன்னதால், கறுப்புச் சாயம் பூசுவோர் நபியின் காலத்திலேயே இருக்கும் போது ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும் என்ற கேள்வி சரியானதல்ல.
ஒப்பீடு தவறா?
கறுப்புச் சாயம் என்பதற்கு இச்செய்தியில் கூறப்பட்ட புறாவின் கழுத்துப் பகுதி என்கிற ஒப்பீடு சரியில்லை என்று கூறி இச்செய்தியின் கருத்தில் சந்தேகம் கொள்கின்றனர்.
கருப்பு நிறத்திற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. அதை விடுத்து புறாவின் கழுத்து நிறத்தை ஏன் கூற வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
இது ஹதீஸை அணுகும் சரியான முறையல்ல.
கறுப்புச் சாயம் தொடர்பான அபூபக்ர்(ரலி)யின் தகப்பனார் அபூகுஹாஃபாவின் செய்தியில் வெள்ளை நிறத்துக்கு ஒப்பீடாக தும்பைப் பூவைப் போன்று என்று கூறப்பட்டது.
வெள்ளை நிறத்துக்கு ஏன் பாலை உதாரணமாக கூறவில்லை? முட்டையை ஏன் குறிப்பிடவில்லை? என்று கேட்டால் அது சரியா?
சொல்லப்பட்ட உதாரணம் சரியா என்று தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து கறுப்பிற்கு ஏன் மற்ற உதாரணங்களைச் சொல்லவில்லை என்று கேட்பது நியாயமான கேள்வியல்ல.
சில புறாக்களின் கழுத்தில் கருப்பு நிறம் உள்ளது. அது தான் இந்தச் செய்தியில் உதாரணமாக கூறப்படுகிறது. ஹதீஸில் சொல்லப்பட்ட இந்த உதாரணத்தில் எந்தப் பிழையும் இல்லை.
கறுப்புச் சாயம் பூசுவதைத் தடைசெய்யும் நபிமொழிகளைப் பலவீனம் என்று சொல்வதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை.
அறிவிப்பு ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் அவை சரியான நபிமொழியாகவே உள்ளன என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
கத்ம் என்றால் என்ன?
நபிகள் நாயகம் நரைத்த முடிக்கு சாயம் பூசுவதை வலியுறுத்தும் போது மருதாணியையும் கத்ம் எனும் செடியையும் பரிந்துரைத்தார்கள்.
عَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ، وَالْكَتَمُ
நரைமுடியை மாற்றுவதற்கான (சாயத்தில்) சிறந்தது மருதாணியும் கத்ம் எனும் செடியுமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூதர் (ரலி), தப்ரானி 1638.
இந்தச் செய்தியில் சொல்லப்பட்டதைப் போல மருதாணியையும் கத்ம் எனும் புல்லையும் இணைத்துச் சாயம் பூசினால் கறுப்பு கலரே வெளிப்படும் என்று கூறி, எனவே கறுப்புச் சாயம் பூசலாம். அதில் தவறில்லை என்று சிலரால் குறிப்பிடப்படுகிறது. இதுவும் தவறாகும்.
கத்மும் மருதாணியும் சேர்ந்தால் கருஞ்சிவப்பு நிறமே வெளிப்படும். இரண்டும் சேர்ந்தால் கறுப்பு நிறம் வெளிப்படும் என்று சிலர் விளக்கம் கொடுத்தாலும், கருஞ்சிவப்பு என்பதே மேலோங்கிய கருத்தாக இருக்கிறது. கருஞ்சிவப்பே வெளிப்படும் என்பதே சரியானதாகும்.
அடர் கறுப்பு நிறம் எனும் ப்யூர் ப்ளாக்தான் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதே தவிர கறுப்புடன் மற்றொரு நிறம் கலக்கும் போது வரும் நிறம் தடுக்கப்படவில்லை. உதாரணமாக, கறுப்பும் சிவப்பும் சேர்ந்தால் கருஞ்சிவப்பு வரும். கறுப்பும் பச்சையும் சேர்ந்தால் கரும்பச்சை வரும். இவ்வாறு கறுப்புடன் மற்றொரு நிறம் சேரும் போது அந்த நிறத்தின் கருநிறம் தான் வெளிப்படுமே தவிர அடர்கறுப்பு (ப்யூர் ப்ளாக்) வெளிப்படாது.
இமாம் இப்னு ஹஜரும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.
والكتم نبات باليمن يخرج الصبغ أسود يميل إلى الحمرة وصبغ الحناء أحمر فالصبغ بهما معا يخرج بين السواد والحمرة . " فتح الباري " ( 10 / 355)
கத்ம் என்பது யமன் நாட்டிலுள்ள தாவரம். (அதன்) நிறம் சிவப்பு கலந்த கறுப்பு வெளிப்படும். ஹின்னா என்பது சிவப்பு நிறம். அவ்விரண்டும் சேர்ந்தால் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடையான நிறம் வெளிப்படும்.
(ஃபத்ஹுல் பாரீ, பாகம்10, பக்கம் 355)
இமாம் இப்னுல் கைய்யூம் அவர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
الكتم والحناء يجعل الشعر بين الأحمر والأسود " زاد المعاد " ( 4 / 336 ) .
கத்மும் மருதாணியும் சேர்ந்தால் முடியை சிவப்புக்கும் கறுப்புக்கும் இடையான நிறமாக ஆக்கும்.
(ஸாதுல் மஆத், பாகம்4, பக்கம் 336)
கத்மும் மருதாணியும் சேர்ந்தால் கறுப்பு நிறம் வெளிப்படும் என்ற ஒரு கருத்து இருந்தாலும் அதை விட கருஞ்சிவப்பு நிறம் வெளிப்படும் என்ற கருத்தே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. ஏனெனில், அடர் கறுப்பு நிறத்தை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தும் அதைப் பூசுபவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என்றும் மேற்படி ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கூறப்பட்டிருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.
எனவே, ப்யூர் ப்ளாக் நிறம் பூசுவதை மார்க்கம் தடைசெய்கிறது. கறுப்புடன் மற்றொரு நிறம் இணைந்து வெளிப்படும் நிறத்தை தாராளமாக பூசிக் கொள்ளலாம். கத்மும் மருதாணியும் இணைந்தால் வெளிப்படும் நிறம் கருஞ்சிவப்பே தவிர அடர் கறுப்பல்ல.
அபூபக்ர் (ரலி) கறுப்புச் சாயம் பூசினார்களா?
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி முன்னிலையில் கறுப்புச் சாயம் பூசினார்கள். நபிகள் நாயகம் அதைக் கண்டிக்கவில்லை என்று பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
وَقَالَ دُحَيْمٌ : حَدَّثَنَا الْوَلِيدُ ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ ، حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ ، عَنْ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَكَانَ أَسَنَّ أَصْحَابِهِ أَبُو بَكْرٍ، فَغَلَفَهَا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ حَتَّى قَنَأَ لَوْنُهَا.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்ளின் தோழர்களிலேயே அபூபக்ர் (ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் தம் (முடியை) மருதாணியாலும், 'கதம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகி விட்டது.
அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(நூல் - புகாரி 3920)
இந்தச் செய்தியில், அபூபக்கர் (ரலி) அவர்கள் மருதாணியையும் கத்மையும் பூசினார்கள் என்று வருகிறது. அதன் பிறகு அவரது நரைத்த முடிகள் கறுப்பாகி விட்டன என்று இடம்பெறவில்லை.
கனஅ லவ்னுஹா என்றே இடம் பெறுகிறது. இதன் பொருள் கறுப்புக்கு நெருக்கமாக சிவப்பு மிகைத்தது என்பதாகும். அதைத்தான் கருஞ்சிவப்பு என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.
கருஞ்சிவப்பாக, சிவப்பு அதிகமாக மிகைத்திருப்பது தான் இதன் முதன்மையான பொருள் என்பதை லிஸானுல் அரப் எனும் அரபு அகராதி நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
قنأ: قَنَأَ الشيءُ يَقْنَأُ قُنُوءًا: اشْتَدَّتْ حُمرَتُه.
கனஅ (என்பதின் அர்த்தமாகிறது): கடும் சிவப்பானது (என்பதாகும்).
(லிஸானுல் அரப், பாகம் 1, பக்கம் 134)
எனவே மருதாணியும் கத்மும் சேர்ந்தால் கறுப்பு வெளிப்படாது. சிவப்பு கலந்த கறுப்பு (கருஞ்சிவப்பு) கலர் தான் வெளிப்படும் என்பதே மொழி ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் சரியான கருத்தாக உள்ளது.
இதன்படி (பியூர் ப்ளாக்) கறுப்பு கலர் சாயம் பூசுவது நபிமொழிகளில் தடுக்கப்பட்டுள்ளது என்றும் கறுப்பு கலருடன் மருதாணி உள்ளிட்ட வேறு நிறத்துடன் சாயம் பூசுவது தடையில்லை என்றும் விளங்கலாம்.
நபித்தோழர்களில் பலரும் கறுப்புச் சாயம் பூசினார்கள் என்று ஒரு பட்டியல் சொல்லப்படுகிறது. அதில் பலதில் நேரடியாக கறுப்பைப் பூசினார்கள் என்று வரவில்லை. கத்மை பூசினார்கள் என்றும் இன்னும் வேறு வார்த்தைகளிலும் இடம்பெற்றுள்ளது. (கத்ம் குறித்து முன்னர் விளக்கி விட்டோம்.) அவையாவும் அறிவிப்பு ரீதியாகவும் ஆய்வுக்குரியவையாக உள்ளன.
அவை ஆதாரப்பூர்வமானவையாகவே இருந்தாலும் கறுப்புச் சாயம் பூசலாம் என்றாகாது. குர்ஆனும் ஆதாரப்பூர்வமான செய்தியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். நபிகளார் தடைசெய்த ஒன்றை நபித்தோழர்கள் செய்தார்கள் என்பதால் அவை மார்க்க ஆதாரமாகி விடாது.
https://www.youtube.com/watch?v=aXPut0i3bUM
https://rb.gy/kl4bcv
