நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே!
நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்து தான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தரம் பிரித்துப் பார்ப்பது ஹதீஸ் கலைவிதியில் இல்லை.
நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



