தவ்ஹீத் ஜமாஅத் video's: உமரலியுடன் விவாதம்1993

உமரலியுடன் விவாதம்1993

 உமரலியுடன் விவாதம்1993


    மயக்கம் தெளிந்தது

  கடந்த சில ஆண்டுகளாக எமது நாட்டில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் தேக்கம் ஏற்படும் அளவுக்கு எம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எம்மிடையே ஒரு தாயியாக இருந்த உமரலியாரும் சிலரும் நாங்கள் சிலருமாகப் பிரிந்து இயங்கும் நிலை ஏற்பட்டது. எங்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்பட குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் முயற்சிகள் செய்யப்பட்டதும் உண்டு. அதன் தொடர்பாகப் பலமுறை இருதரப்பும் சந்தித்துக் கதைத்துக் கொண்டதும் உண்டு.

 உமர் அலியார் சில ஆண்டுகளுக்கு முன் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு ஜமாஅத்தை ஸ்தாபிதம் செய்து கொண்டு, அதற்குத் தம்மையே அமீராகவும் அறிவித்துக் கொண்டார். தம்மிடம் பைஅத் செய்து முஸ்லிம் ஜமாஅத்தில் இணையாதவர்கள் காஃபிர்கள் என்று சொன்னார்.

 யார் பைஅத் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுகிறார் என்ற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு, தமது ஜமாஅத்தைச் சேராதவர்கள் அனைவரையும் - மொத்த உலக முஸ்லிம்களையுமே - காபிர்கள் என்றார். ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் பற்றிப் பிடித்துக் கொள் என்று வருகின்ற ஹதீஸையும் உமரலியார் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

முஸ்லிமில் வரும் ஹதீஸில் பைஅத் என்று கூறப்படுவது தம்மிடம் பைஅத் செய்வது தான் எனவும், ஜாஹிலியத்தில் மரணிப்பது என்பது காஃபிர்களாக மரணிப்பது எனவும் உமரலியார் விளக்கம் அளித்துத் தமது நாவன்மையால் சிலரை நம்பச் செய்தார். அவரது பேச்சை நம்பி எம்முடனிருந்த சகோதரர்களில் சில நூறு பேர், அவருடன் இணைந்தனர். எங்களில் சிலர் சிந்தனையை முற்றாக அவரிடம் அடகு வைத்த பரிதாப நிலையை நாங்கள் காண நேர்ந்தது.

காபிர்களின் சட்டங்களுக்கு கட்டுப்படக் கூடாது என்பதால், பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்றவைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று உமரலி சொன்னதும் அதை வேத வாக்காகக் கொண்டவர்கள் அவற்றைக் கிழித்ததும், எமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் அயல் நாடு செல்ல முயன்று பிடிபட்டு அடி உதைகளுக்கு ஆளானதும் கொடுமையாகும். ஆனால் காஃபிர்களின் அரசாங்கம் வெளியிட்ட ரூபாயைப் பயன்படுத்த உமரலியார் தடைவிதிக்காதது அவரது குழம்பிய மனநிலையையே காட்டியது.

அரசாங்கம் வகுத்தளித்த சட்டத்தின் படி எமது வாகனங்களுக்கு கட்டாயம் இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் உமரலி அவ்விதம் இன்ஷுரன்ஸ் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால், அவரிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தம்மிடம் இருந்த வாகனங்கள் அனைத்தையும் விற்று விட்டனர். தமது வாழ்க்கைத் தேவைக்கு அளவுக்கு மிச்சமாக விவசாயம் செய்யக் கூடாது என்றெல்லாம் உமரலியாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பாரிய நஷ்டங்களைச் சந்தித்தனர். அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று எச்சரித்து மக்களைத் தவறான பாதைக்கு கொண்டு சென்றார் உமரலியார்.

  தம்மிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தவிர அனைவரும் காஃபிர்கள் ஆனதால், காஃபிர்களின் வசமுள்ள கஅபாவுக்கு ஹஜ் செய்யக் செல்லக் கூடாது என்று சென்னது மிகப் பெரிய கொடுமை.

  ஒரு குடும்பத்தில் கணவன் பைஅத் செய்து மனைவி அவ்விதம் செய்யா விட்டாலோ, அல்லது மனைவி பைஅத் செய்து கணவன் செய்யாவிட்டாலோ அவர்களது கலியாணம் ரத்தாகி விட்டது என்றார். பல கணவன் மனைவியர் பிரிந்த பரிதாபங்கள் நடந்தன. அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மிரட்டி, அவரும் நெருங்கிய சகாக்களும் பல திருமணங்கள் செய்தனர். தலாக்கும், நிக்காஹும் விளையாட்டுக்களாகவே நடந்தேறின.

 எமது மக்களின் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டியதொரு முக்கியமாதொரு கடப்பாடு எமக்குண்டு என்பதால், உமரலியின் கூற்றுக்குத் தக்க பதில்களை ஆதாரப்பூர்வமாக எமது அறிஞர்கள் அளித்தனர். முஸ்லிம் அறிவிப்பில் வரும் பைஅத் என்பது ஆட்சியாளரிடம் செய்யும் பைஅத் தான் என்றும், ஆட்சியாளரிடம் பைஅத் செய்யாவிட்டால் கூட ஒருவர் காஃபிராகி விடமாட்டார் என்றும் எமது அறிஞர்கள் விளக்கினார்கள்.

   சுவர்க்கத்திற்குரியவர்கள் என்று எமது நபியால் கூறப்பட்ட தல்ஹா (ரழி) ஆகியோர் அமீருல் முஃமினீன் அலி (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யவில்லை என்பதை எடுத்து வைத்தனர். இன்னும் சொன்னால் அலி (ரழி) அவர்களை எதிர்த்து அன்னை ஆயிஷா (ரழி) தலைமையில் நடைபெற்ற ஜமல் யுத்தத்தில் கலந்து போரிட்டு அவ்விருவரும் ஷஹீதானார்கள் என்று கூறி, அலி (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யாத அந்த இரண்டு ஸஹாபிகளும் காஃபிர்களா? அப்படியாயின் அவ்விரண்டு பேரைக் குறித்தும் நாயகம் (ஸல்) அவர்கள் சுவர்க்கவாதிகள் என்று முன்னறிவிப்புச் செய்திருப்பார்களா? என்ற வாதத்தை எமது அறிஞர்கள் முன் வைத்தனர்.

   அலி (ரழி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரழி) அவர்கள் தலைமையில் பல ஸஹாபாக்கள் போரிட்டு பலர் கொல்லப்பட்டனர். சிஃப்பீன் யுத்தம் பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டு அந்த நபித்தோழர்கள் காஃபிர்களா என்றும் கேட்கப்பட்டது. யஸீதுக்கு பல நபித்தோழர்கள் பைஅத் செய்தும்  ஹுஸைன் (ரழி) அவர்கள், தான் மட்டும் பைஅத் செய்ய மறுத்துப் போரில் கொல்லப்பட்டார்களே! அவர்களை சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர் என்று நாயகமவர்களே நவின்றுள்ள போது அவர்கள் எப்படிக் காஃபிராவார்கள் என்று கேள்விகளைத் தொடுத்தனர்.

  அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் ஃபாத்திமா நாயகி (ரழி) அவர்கள், அபூபக்கர் (ரழி) அவர்களிடம் பைஅத்தும் செய்யவில்லை; பேசவும் இல்லையே; அவர்களிடம் பேசா நிலையிலேயே மரணித்தும் விட்டார்களே! அவர்கள் காஃபிர்களா? அப்படியானால் சுவனத்துப் பெண்களின் தலைவி என்று நபிகள் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்களே! என்றெல்லாம் கேட்கப்பட்டது.

 இதன் பின்னர், சிந்தித்துத் தெளிவுபெற்ற சிலர் உமரலியின் பிடியில் இருந்து மீண்டனர். ஆனால் உமரலியாரோ எமது அறிஞர்கள் முன் வைத்த அத்தனை வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தந்த ஒரே பதில், இவை சரித்திரம் - தாரீக் - இதை ஏற்பது ஷிர்க் - ஏற்பவன் காஃபிர் என்பது தான். நாயகம் அவர்களின் முன் அறிவிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கூட சரித்திரம் என்று கூறி நிராகரித்தனர். இவரது திசை திருப்பலைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் நம்பி அவருடனேயே இருந்தனர்.

நிலைமை இப்படியிருக்க ஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அழைப்பின் பேரில் முஅஸ்கருக்கு (மாநாட்டிற்கு) இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு வருகை தந்த உலமாக்களை தஃவத் என்ற முறையில் கடிதம் மூலமும், நோட்டீஸ் மூலமும் உமரலியார் அழைத்தார். 1992-11-10 ஆம் திகதி தமது ஊரான ஏத்தாளையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசவந்த இந்திய உலமாக்களைத் தம்முடன் கதைக்க வருமாறு கடிதம் மூலமும் ஒலிபெருக்கி மூலமும் அழைப்பு விடுத்தார். அல்ஜன்னத் ஆசிரியர் பி. ஜைனுல் ஆப்தீன், உமரலியாரின் அழைப்புக்கு பதிலளித்தார்.

 நாங்கள் ஒரு ஜமாஅத்தின் அழைப்பில் வந்துள்ளோம்; அவர்களால் எங்கள் நிகழ்ச்சிகள் முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இந்தியா சென்றதும் எங்களுக்கு உமரலியார் அழைப்பு அனுப்பினால் எங்கள் செலவில் வந்து பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என்று அந்தக் கூட்டத்திலேயே பி. ஜைனுல் ஆப்தீன் பதிலளித்தார்.

   இந்தத் தொடரில் மவ்லவி ஜைனுல் ஆப்தீனுக்கும், உமரலிக்கும் இடையே பல கடிதப் போக்குவரத்துக்களுக்குப் பிறகு 1993-07-08 ஆம் திகதி ஜைனுல் ஆப்தீன் தமது சகாக்களான மவ்லவி ஸைபுல்லாஹ், ஸுலைமான், தமிழ்நாடு ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸின் பொருளாளர் முஹம்மது உஸ்மான் கான் ஆகியோருடன் இலங்கை வந்தார்.

  ஜுலை 12ம் திகதி உமரலியுடனும், அவரது சகாக்களுடனும் விவாத ஒப்பந்த விதிகள் பற்றிப் பேசி 13ஆம் திகதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். தீர்ப்பு வழங்குவதற்காக இன்றி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நடுவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி அனஸ் மாஸ்டர் அவர்கள் இரு தரப்பினராலும் நடுவராக ஏற்படுத்தப்பட்டார்.

 1993-07-14 புதன்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் அவரது தலைமையில் விவாதம் நடைபெற்றது. உமரலி தம் விவாதத்தில் யார் பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுகிறார் என்று முஸ்லிமில் வரும் ஹதீஸையும், அஹ்மதில் வரும் இதே கருத்துள்ள இன்னொரு ஹதீஸையும் முன் வைத்து, பைஅத் அவசியம்; எமது ஜமாஅத்தில் பைஅத் செய்யாத ஜைனுல் ஆப்தீன் உட்பட அனைவரும் காஃபிர்கள் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தார்.

 இதற்குப் பதிலளிக்கும் போது ஜைனுல் ஆப்தீன் பல கேள்விகளை எழுப்பினார். அவற்றில் ஒரு கேள்விக்கும் உமரலியார் பதில் கூறவில்லை. அவரது கேள்வியின் சாரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

 நபியவர்கள் இவ்வாறு உமரலியிடம் நேரடியாகக் கூறவில்லை. இப்னு உமர் (ரழி) அவர்களிடம் இதைக் கூறினார்கள். அவர் நாஃபிவு என்பவரிடம் கூறினார். அவர் ஸைத் பின் முஹம்மதிடம் கூறினார். அவர் ஆஸிம் என்பாரிடம் கூறினார். அவர் முஆத் என்பாரிடம் கூறினார். அவர் உபைத் என்பாரிடம் கூறினார். அவர் முஸ்லிம் என்பாரிடம் கூறினார் என்ற வரிசையிலேயே இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

  இவர்களெல்லாம் யார்? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்களா? கற்பனைப் பாத்திரங்களா? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தான - அதாவது காஃபிரான - மரணத்தைத் தழுவுவார்கள் என்பதை அறிவிக்கும் இவர்கள் பைஅத் செய்தவர்கள் தானா? பைஅத் செய்யாத சிலரும் இவர்களில் உள்ளனர். பைஅத் செய்யாதவர் காஃபிர் என்ற உங்கள் வாதப்படி இவர்களும் காஃபிராகி விட்டனர். காஃபிர்கள் வழியாக இது அறிவிக்கப்படுகிறது - (உங்கள் கருத்துப்படி)

 இதைக் கூறியவர்களே காஃபிர்கள் எனும் போது அவர்கள் கூறிய இந்தச் செய்தியை நீங்கள் எப்படி நம்பினீர்கள்? பைஅத் செய்யாத அவர்கள் காஃபிர்கள் அல்ல என்பது உங்கள் பதிலானால் பைஅத் செய்யாவிட்டால் காஃபிராக மாட்டார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டவராவீர்கள்.

 அல்லது இந்தச் செய்தியை நபியவர்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்டீர்களா? நீங்கள் நேரடியாகக் கேட்கவில்லையானால் சரித்திரத்தின் துணை கொண்டே நபிமொழி என்று நீங்கள் அறிந்ததாகச் சொன்னால் நீங்களே சரித்திரத்தை ஏற்றுவிட்டீர்கள். சரித்திரத்தை ஏற்பவன் காஃபிர் என்ற உங்கள் வாதப்படி உங்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டீர்கள். ஹிஜ்ரி 40க்குள் நடந்த சம்பவங்களை - நபியின் முன்னறிவிப்புடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை - கூறினால் அது சரித்திரம் என்று நிராகரித்த நீங்கள் 200 ஆம் ஆண்டில் வாழ்ந்த முஸ்லிம் என்பவரை - அவர் நல்லவர் என்பதை - எப்படி ஏற்றீர்கள்?

 இந்தக் கேள்விக்கு விடை கூறாமல் அடுத்த விஷயத்திற்குச் செல்ல முடியாது என்பதில் ஜைனுல் ஆப்தீன் உறுதியாக இருந்தார். இவற்றுக்குப் பதில் சொல்வதில்லை என்பதில் உமரலியும் உறுதியாக இருந்தார்.

 இவற்றுக்குரிய நேரடியான பதிலில் அவரது சாயம் வெளுத்து விடும் என்ற அச்சத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நபிமொழி தான் என்று மட்டும் கடைசி வரை கூறினாரே தவிர பதில் கூறவில்லை. ஒரு கட்டத்தில் இவற்றுக்குப் பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேன் என்று கூறியதும் சபையே கொல்லென்று சிரித்தது.

 உமரலியார் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ஜமாஅத்தில் பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள். எனவே, பைஅத் செய்து கொண்டு முஸ்லிம் ஜமாஅத்தில் நுழையுங்கள். குர்ஆன் - ஸுன்னாவை ஆதாரம் என்று ஏற்றுக் கொண்டு, இப்போது இந்த ஹதீஸைச் சொன்னவர் காஃபிரா முஸ்லிமா என்கிறார். எங்களது தலையங்கம் நீங்கள் காஃபிரா இல்லையா என்பது தான். இவர் வரலாற்றை எடுக்கிறார். நான் இதற்குப் பதில் சொன்னால் பிடித்துக் கொள்வார் என்றார்.

 ஜைனுல் ஆப்தீன் தமது அடுத்த உரையில், வராலாற்றைச் சொல்வது ஷிர்க் என்று உமரலி கூறியதன் அடிப்படையில், வரலாற்று ரீதியாக உள்ள தொடரில் ஹதீஸைச் சொன்னதால் தாங்கள் முஷ்ரிக்குகள் என்பதை ஒப்புக் கொண்டார் என்றார்.

   உமரலி மீண்டும் பேசும் போது நபி (ஸல்) காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் நாயகம் அவர்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முன்னிலையாகத்வ்தான் கூற வேண்டும். அது போல் ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் அமீராகிய என்னிடம் நேரில் வந்து கூற வேண்டும் இல்லாவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை என்பதாகக் கூறினார்.

 அப்படியானால் உமரலியாகிய உங்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூற வேண்டுமா? உங்களை இறைத் தூதராக பிரகடனம் செய்கிறீர்களா? என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு - திரும்பத் திரும்பக் கேட்டதற்கு - உமரலி பதிலும் கூறவில்லை மறுக்கவும் இல்லை.

    ஃபாத்திமா (ரழி) பைஅத் செய்யாத சம்பவம் பற்றிய ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றதாக ஜைனுல் ஆப்தீன் கூறியதற்கு அது பொய்யான செய்தி என்றார் உமரலி.

 உடனே ஜைனுல் ஆப்தீன் பொய்யும், மெய்யும் கலந்துள்ள புகாரி முஸ்லிமிலிருந்து மெய்யானவற்றை எப்படி கண்டறிந்தீர்கள். அறிவிப்பாளர்களின் சரித்திரத்தை வைத்தா? அல்லது உங்களுக்கு தனியாக வஹி வந்ததா? வரலாற்றின் துணையால் இவற்றை நபி மொழி என்றால் உங்கள் வாதப்படி நீங்கள் காஃபிராகி விடுவீர்கள். வரலாறு தேவையில்லை என்றால் நபிமொழி என்று எதைச் சொன்னாலும் நம்புவீர்களா?

   கைத்தடி வைத்துக் கொள்வது மூஃமினுக்கு அடையாளம் என்றும் ஹதீஸ் உள்ளது. அதன்படி உங்களிடம் கைத்தடி இல்லாததால் உங்களை காஃபிர் என்று சொல்லலாமா? இந்த ஹதீஸ் சரியானது இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு உமரலியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

 காலை 8 மணி முதல் 9 மணி வரை விவாதம் நடக்குமென ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பகல் 11 மணிக்கே பதில் இல்லாமல் முழித்த உமரலியார் முபாஹலாவுக்கு அழைத்தார். தொடர்ந்து ஜைனுல் ஆப்தீன் தொடுத்த ஒவ்வொரு கேள்விக்கும் முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்டு விவாதத்தை முடிப்பதிலேயே உமரலி குறியாக இருந்தார்.

 விவாதத்தின் போதே மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர் என்றாலும், முபாஹலாவைக் காரணம் காட்டி அவர் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக ஜைனுல் ஆப்தீன் அதையும் ஏற்றார்.

 முபாஹாவுக்கு அழைப்பதற்கு சத்தியத்தில் இருக்கும் தங்களுக்கே உரிமை இருப்பதாக் கூறி இந்தியாவிற்கு அழைத்தார். உமரலி அழைப்பை ஏற்று நாம் இலங்கை வந்தது போல் தமது அழைப்பை ஏற்று அவர் இந்தியா வர வேண்டும் என்று கூறியபோது உமரலி பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். அவற்றுக்கு விளக்கம் கூறிய பின் தம்மிடம் பணம் இல்லை என்றார். கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் உமரலிக்கு அவரது குடும்பத்துக்குமாக போக்கு வரத்துச் செலவை ஏற்றனர். இந்தியாவிற்கு உமரலி எப்போதும் தயாராக இருப்பதாக பி. ஜைனுல் ஆப்தீன் அறிவித்த உடன் ஐந்து மணிக்கே விவாதம் முடிவுக்கு வந்தது.

 ஜைனுல் ஆப்தீன் தரப்பில் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி, அன்ஸார் மவ்லவி, ஸைபுல்லாஹ் ஹாஜா, சுலைமான் ஆகியோரும் உமரலி தரப்பில் நதீர் மவ்லவி, அஸ்லம், நைரோஸ், ரஃபீக் ஆகிய மவ்லவிகளும் கலந்து கொண்டனர். மொத்தத்தில் உமரலியின் பிடியில் சிக்கியிருந்த பலர் மயக்கம் தெளிந்தனர். பலர் அவரிடம் செய்த பைஅத்தை முறித்துக் கொண்டதாகவும் எம்மிடம் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

 இந்த விவாதம் முழுமையாக வீடியோவிலும், ஓடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கெசட் பீஸ் தேவைப்படுவோர் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொழும்பு கிளையில் பெற்றுக் கொள்ளலாம்.

        உமர் அலியே வருக!

 கடந்த ஜுலை மாதம் இலங்கையில் உமரலியுடன் விவாதம் நடந்ததும் விவாதத்தின் இடையிலேயே முபாஹலாவுக்கு அவர் அறைகூவல் விடுத்ததும் அதை நான் ஏற்றதும் அனைவரும் அறிந்ததே.

 நான் இலங்கையை விட்டுப் புறப்படும் முன் இந்தியாவில் எந்த இடத்திலும், எந்த நாளிலும் முபாஹலாவுக்காக நீங்கள் வரலாம் பதினைந்து நாட்களுக்கு முன் எனக்குத் தெரிவித்து விட வேண்டும் என்று கடிதம் எழுதி அவரிடம் சேர்ப்பித்து விட்டு அவரும் அவரது குடும்பத்தாரும் இந்தியா வந்து செல்லும் செலவுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செயது விட்டு வந்தேன்.

 மாதங்கள் பல உருண்டோடியும் உமரலி வந்த பாடில்லை. வரும் எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இடம், நாள் உட்பட எல்லா லிஷயத்திலும் முடிவு செய்யும் அதிகாரத்தை அவரிடமே வழங்கி எழுதிக் கொடுத்திருந்தும் ஒப்பந்தம் செய்யாததால் வர இயலவில்லை என்று மழுப்பல் கடிதம் அனுப்பியிருக்கிறார். நாம் கையெழுத்திட்டு ஆட்கள் வழியாக நேரில் சமர்ப்பித்த கடிதத்தையே ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டு அவர் வந்திருக்க வேண்டும்.

அவரது வழியில் அவருக்கே நம்பிக்கையில்லாத நிலையில் முபாஹலாவைச் சந்திக்க அவர் தயங்குகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது. அவரை நம்பிய அவரது சகாக்கள் யாரேனும் இருந்தால் அவரை நிர்பந்தம் செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் மறுத்தால் அவர் தமது கொள்கை தவறு என்பதை ஒப்புக் கொள்ளுமாறு அவரது சகாக்கள் நிர்பந்திக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் அவரை இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 அவரை வரவழைக்கும் வகையில் கடிதப் போக்குவரத்துக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்பதை இலங்கைச் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். முபாஹலா அழைப்பை நான் ஏற்றுக் கொண்டதால் இவ்விளக்கம் அவசியமாகிறது.

    அன்புடன்,

    பி. ஜைனுல் ஆப்தீன்.

    05.08.2009. 

Search This Blog