தவ்ஹீத் ஜமாஅத் video's: 1 -இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

1 -இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

 இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

முன்னுரை

நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள்.

நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருளைத் தக்க முறையில் ஒருவர் அறிந்து கொண்டால் மத்ஹபுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்.

லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பது பொருள். இதை ஏற்பவர், அல்லாஹ் தான் அனைவருக்கும் எஜமான்; அனைவரும் அவனது அடிமைகள் என்று வாக்கு மூலம் தருகிறார்.

ஒன்றைக் கூடும் என்று சட்டமியற்றவோ, கூடாது என்று தடை விதிக்கவோ அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. இறைவனல்லாத வேறு யாரும் இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எவர் நம்பினாலும் அவர் இந்த உறுதிமொழியை மீறியவராகிறார்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.  திருக்குர்ஆன் 9:31

பெரிய மேதைகளும், மகான்களும், வேத விற்பன்னர்களும், இமாம்களும் அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படவும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். சுயமாக இறைவனின் வேத ஆதாரமின்றி, இறைத்தூதரின் வழிகாட்டலின்றி எந்த ஒன்றையும் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ எந்த அதிகாரமும் எவருக்கும் இல்லை என்ற கருத்தும் லாயிலாஹ இல்லல்லாஹ்வுக்குள் அடங்கியுள்ளது.

இதற்கு மாறாக நடப்பவர்கள், மறுமையில் சந்திக்கும் விளைவை வல்ல அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவிக்கிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)   திருக்குர்ஆன் 33:66,67,68

கண்ணை மூடிக் கொண்டு பெரியார்கள், இமாம்கள் கூறுவதை நம்பியவர்கள் மறுமையில் படும்பாட்டை இங்கே அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

வணக்க வழிபாடுகளாகட்டும்! அரசியலாகட்டும்! இல்லற நெறிகளாகட்டும்! இன்ன பிற துறைகளாகட்டும்! அனைத்துமே அல்லாஹ் காட்டித் தந்த வழியில் தான் நடக்க வேண்டும். இதை நிர்ணயிக்கின்ற உரிமையை அல்லாஹ் எவரது கையிலும் ஒப்படைக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் பொருள் என்ன? முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பது இதன் நேரடிப் பொருளாகும்.

இதனுள் அடங்கியுள்ள கருத்துக்கள் என்ன?

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் மார்க்கத்தின் பெயரால் எதைச் சொன்னாலும் அது அவர்களாக உருவாக்கிச் சொன்னது அல்ல. அல்லாஹ்விடமிருந்து பெற்றுச் சொன்னதாகும் என்பது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதன் கருத்தாகும்.

இந்தச் சமுதாயத்துக்கு அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களைத் தவிர எவர் கூறுவதும் மார்க்கமாக ஆகாது. ஏனெனில் எவருக்கும் இறைச் செய்தி வராது என்பதும் இதன் கருத்தாகும்.

இமாம்கள் சொன்னார்கள் என்பதற்காக ஒரு விஷயத்தை மார்க்கம் என்று நாம் எடுத்துக் கொண்டால் இந்த உறுதிமொழியை நாம் மீறியவர்களாவோம். அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய சட்டமியற்றும் அதிகாரம் அந்த இமாமுக்கும் உள்ளது என்ற கருத்து இதனால் ஏற்படும். அல்லாஹ்விடமிருந்து பெற்று அந்த இமாம்கள் கூறினார்கள் என்று கருதினால் அவர்களை அல்லாஹ்வின் தூதர்களாகக் கருதுகிறோம் என்ற கருத்து இதனால் ஏற்படும்.

எனவே இமாம்களையும், மத்ஹபுகளையும் ஒருவர் பின்பற்றினால் அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதையும், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதையும் மறுத்தவராவார்.

உண்மை இவ்வளவு தெளிவாக இருந்தும் மத்ஹபுகள்தான் மார்க்கம் என்று மக்கள் நம்புகிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்நூலை வெளியிடுகிறோம். மத்ஹபுச் சட்டங்கள் கேலிக்கூத்தாகவும், மடமையின் தொகுப்பாகவும், அர்த்தமற்ற உளறல்களாகவும், அருவருக்குத் தக்க ஆபாசமாகவும், சமுதாயத்துக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகவும், ஒழுக்கக்கேடுகளைப் பரப்பக் கூடியதாகவும் உள்ளன என்பதை மத்ஹபு சட்டங்களை அதன் அரபு மூலத்துடன் இந்நூலில் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்தச் சட்டங்களைப் பார்த்த பின்னர் அறிவு நாணயம் உள்ள எவராலும் மத்ஹபில் இருக்க முடியாது.

இந்தச் சட்டங்களைப் பார்த்து, சமுதாயம் விழிப்படைந்து அல்லாஹ்வின் பக்கமும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பக்கமும் வர வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாகும்.

இந்த நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!

நான்கு இமாம்கள் ஓர் அறிமுகம்

இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர்.

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக இருந்தும் அவர்கள் பெயரால் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. தாபியீன்களில் ஏராளமான மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பெயராலும் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு அவர்களில் நான்கு இமாம்களின் பெயரால் மட்டும் மத்ஹபுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம் அவர்கள் அன்றைக்குப் பெற்றிருந்த அரசியல் செல்வாக்குதானே தவிர நபித்தோழர்களையும், தாபியீன்களையும் விட இவர்கள் மாமேதைகள் என்பது காரணம் அல்ல.

இவர்களை மதிக்கக் கூடியவர்கள் எவ்வளவு காலம் ஆட்சிக்கட்டிலில் இருந்தார்களோ அதற்கேற்ற அளவு அந்த மத்ஹபுகள் மக்களிடம் பரவியது என்பது தான் உண்மையாகும்.

தொடரும்....

நூல் : இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள்

பி ஜெய்னுல் ஆப்தீன்

நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை

மத்ஹபுகளை நான்கு இமாம்கள் உருவாக்கவில்லை

மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்  அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? எல்லோருக்கும் அரபுமொழி தெரியாது! இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?






short link https://rb.gy/pmpq7l

Search This Blog